இஸ்லாத்தில் அரஃபா தினத்தின் சிறப்புக்களை அறிந்துகொள்வோம்.

இஸ்லாத்தில் அரஃபா தினத்தின் சிறப்புக்களை அறிந்துகொள்வோம். 


மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவில் ஒரு மலை உள்ளது! அதைச் சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் தான் அரஃபா ஆகும்! அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள் ஆகும்!

அரஃபா மைதானம் எப்போதும் வெட்ட வெளியாகக் காட்சி தரும்! ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் வந்த விட்டால் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடும் நாளாக அரஃபா மைதானம் ஆகி விடும்!

ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மக்கள் துல் ஹஜ் உடைய 9 வது நாளில் உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம் தான் ‘ அரஃபா தினம் ’ ஆகும்!

அன்றைய தினத்தில் ‘ அரஃபா மைதானத்தில் ’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பார்கள்!

ஹஜ் செய்ய கூடியவர்கள் கட்டாயம் அரஃபா மைதானத்திற்கு சென்று சிறிது நேரமாவது தங்க வேண்டும் அப்போது தான் ஹஜ் பூர்த்தி ஆகும்! இல்லை என்றால் இவர்களின் ஹஜ் செல்லுபடி ஆகாது!

(நூல் : தப்ரானீ : 6302 | ஸஹீஹ் ஜாமிஃ : 5995 | திர்மிதி : 889)

அரஃபா எனும் பெயர் வர காரணம் :

ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அல்லாஹ் தடுத்த ஒரு செயலை செய்த காரணத்தினால் அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து இருவரையும் வெளியேற்றி இருவரையும் தனி தனியாக வெவ்வேறு இடங்களுக்கு அல்லாஹ் உலகில் இறக்கி வைத்தான்!

பிறகு இருவரும் நீண்ட காலம் பாவ மன்னிப்பு தேடிய பின்பு இருவரையும் அல்லாஹ் மன்னித்து அரஃபா எனும் இடத்தில் தான் அல்லாஹ் சந்திக்க வைத்தான்! அதனாலயே இதற்கு அரஃபா (அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது!

அரஃபா மைதானத்தின் நடுப்பகுதியில் ஒரு மலை உள்ளது இதனை ‘ ஜபலே ரஹ்மத் ’ (அருளின் மலை) என்று அழைப்பார்கள்! இந்த இடத்தில் வைத்து ஆதம் (அலை) அவர்களும் அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள் மீதும் அல்லாஹ் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்தான் அதனாலயே இதற்க்கு அருளின் மலை என்றும் பெயர் வந்தது!

இந்த மலையின் மீது ஏறி நின்று தான் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்!

(நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

அரஃபா நாளின் சிறப்புகள் :

  1. அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் :

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ், அரஃபா தினத்தன்று முதல் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்!

"எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள்! அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்!

(நூல் : முஸ்னத் அஹ்மத் : 7089)

  1. நரக விடுதலை உறுதி செய்யும் நாள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2623)

ஹதீஸ் விளக்கம் : இந்த நாளில் நாம் செய்ய கூடிய நல்ல அமல்கள் மூலம் அல்லாஹ் நரகில் விடுதலையை உறுதி படுத்துகிறேன்!

  1. துஆ ஏற்ற கொள்ளப்படும் சிறந்த நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா நாளின் போது கேட்கப்படும் துஆவே சிறந்த துஆவாகும்! துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்!

(நூல் : சுனன் திர்மிதி : 3585)

(தரம் : ஹசன் : அல்பானி (ரஹ்) : ஸஹீஹு அத் தர்கீப் வத் தர்ஹீப் : 1536)

நாம் இந்த அரஃபா நாளில் அதிகம் அதிகம் நமக்கும் நம்முடைய குடுபத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முழு முஸ்லீம் சமுதாயத்திற்கு இம்மை மறுமைக்கும் அதிகம் துஆ செய்ய வேண்டும்!

  1. இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்றது :

இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்று விட்டது! இதற்க்கு பிறகு இஸ்லாத்தில் நன்மை காரியம் என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் உள்ள ஒரு செயலை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது!

ஆனால் இஸ்லாம் முழுமை பெற்றாலும் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஆரம்ப கால மக்களிடம் எப்படி அறியாமை மூடநம்பிக்கை ஷிர்க் ஆனா செயல்கள் இருந்த அதே நிலை இஸ்லாத்தில் மீண்டும் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

(நூல் : சுனன் திர்மிதி : 2629)

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்!

(சூரத்துல் : அல் மாயிதா : 03)

என்ற அல் குர்ஆன் வசனம் அரஃபா நாளின் வெள்ளிக்கிழமை அன்று இறங்கியது! இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள்! நபி (ஸல்) அவர்கள், உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன? என வினவினார்கள்!

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம்! இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது! முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்! என உமர் (ரழி) கூறினார்கள்! அதற்கு நபி (ஸல்) நீங்கள் உண்மை தான் கூறினீர்கள் என்றார்கள்!

(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் | ஸஹீஹ் முஸ்லிம் : 5742)

  1. அல்லாஹ் சத்தியம் செய்த நாட்கள் :

சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக!

(சூரத்துல் : அல் புரூஜ் : 03)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமைநாளாகும்! சாட்சி சொய்ய வேண்டிய நாள் என்பது அரஃபா தினமாகும்! சாட்சி என்பது ஜுமுஆ தினமாகும்!

(நூல் : சுனன் திர்மிதி : 3339)

  1. சிறந்த திக்ர் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

  1. நபி (ஸல்) அவர்களின் கடைசி உரை :

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10 யில் மட்டும் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹஜ் மட்டும் செய்து உள்ளார்கள்! இது தான் நபி (ஸல்) அவர்களின் முதல் மற்றும் கடைசி ஹஜ் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன்பு கடைசியாக மக்களுக்uகு ஹிஜ்ரி 10 துல் ஹஜ் 9 வது நாள் அரஃபா நாளில் தான் வரலாற்று சிறப்புமிக்க உபதேசம் செய்தார்கள்!

அல் குர்ஆன், நபிவழி - இரண்டையும் பின்பற்றுங்கள் :

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்! எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்!

உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன்! நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும்!

(நூல் : இப்னு மாஜா : 3074 | அபூதாவூத் : 4607)

தலமைக்கு கட்டுப்பட வேண்டும் :

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்! (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(நூல் : ஸுனன் நஸாயி : 4192 | திர்மிதி : 616)

இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு பார்க்க கூடாது :

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை!

எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை! இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்!

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர் தான்!

(நூல் : அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா : 2700)

பெண்களை மதிப்புடன் நடத்துங்கள் :

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்!

அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன!

அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்!

இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு! அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும்!

அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்! அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்! அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்! அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(நூல் : முஸ்லிம் 2334 | ஸஹீஹ் ஜாமி : 7880 | திர்மிதி : 1163)

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் :

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை! உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை! உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள்!

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள்! அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்! எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம்!

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்!

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்! உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2334)

அற்பமானவற்றை வைத்தும் ஷைத்தான் வழிகேடுப்பான் :

எச்சரிக்கையாக இருங்கள்! மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான்! ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்!

ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

வட்டிக் கணக்கிடாதீர்கள் :

• அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன! மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது அசல் உங்களுக்கே உரியது!

(நூல் : முஸ்லிம் : 2334 | இப்னு மாஜா : 3074)

சகோதரத்துவம் பேணுங்கள்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே!

ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல! மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள்

(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

சொர்க்கம் செல்லும் வழி :

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்! உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்! (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்!

விருப்பமுடன் ஜகாத் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!

(நூல் : திர்மிதி : 616 | மிஷ்காத் : 576)

மார்க்கத்தை பிறருக்கு எடுத்து கூறுவது நமது மீது கடமை :

மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் கேட்டார்கள்!

கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்றார்கள்!

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்!

இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்! ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்!

(நூல் :ஸுனனுத் திர்மிதி & முஸ்னது அஹ்மது | முஸ்லீம் : 1739)

  1. அரஃபா நாளில் தான் அல்லாஹ் நம்மிடம் வாக்குறுதி வாங்கினான் :

அல்லாஹ் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களை படைத்தான் அவர்களின் விலா எலும்பில் இருந்து அவ்வா (அலை) அவர்களை படைத்தான்!

ஆதம் (அலை) மற்றும் அவ்வா (அலை) இவர்கள் இருவர் மூலமே அல்லாஹ் மனித சமுதாயத்தை தோற்றுவித்தான்!

அல்லாஹ் அரஃபா நாளில் ஒரு பெருவெளியில் ஆதம் {அலை} அவர்களின் முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான்!

அதாவது, அவரது முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான்! பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்!

பின்னர், அவர்களை நோக்கி நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று கேட்டான்! ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம் என்றனர்!

இவ்வாறு செய்வதற்கு காரணம் அல்லாஹ் கூறுகிறான் :

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக! (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்!

அல்லது, இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

(சூரத்துல் : அல் அஃராஃப் : 172 & 173 | (நூல் : சுனன் அல் குப்ரா : 11191 | முஸ்னத் அஹ்மத் : 2455)

கருத்துரையிடுக

0 கருத்துகள்